சென்னை பதிவர் பட்டறையில் வெளியிடப்பட்ட கணிச்சுவடியின் இற்றைப்படுத்தப்பட்ட பதிப்பை .pdf வடிவில் இங்கு பதிவிறக்கலாம். தமிழ்த் தட்டச்சு, தமிழ்99 பழகுமுறை, எ-கலப்பை நிறுவல் குறித்து இதில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இந்தக் கணிச்சுவடியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறோம். நன்றி.

‘முன்னூறு நன்கொடையும் சேர்த்துத் திரட்டிய பணம்’ என்று பேரம் பேசி நாலு இடம் அலைந்து பாலபாரதியும் அவரது அலைச்சல்களுக்கு உறுதுணையாக லக்கிலுக்கும் இழுத்துப் பிடித்தும் 26394 ரூபாய்கள் செலவாகி இருக்கின்றன.

பெரிய செலவுகளாக மதிய உணவு (9200), கணினி வாடகைக்கு எடுத்தல் (மொத்தம் 10,000 - 5,000 பணமாக), குறுவட்டு உருவாக்கம் (4350).

மொத்தம் பணமாக வழங்கிய பங்களிப்பு - 77670

மொத்தம் பணமாகச் செலவளித்த தொகை - 26394

கையில் மீதமிருப்பது - 51276

அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு, பயிற்சிப் பட்டறைகளுக்கான திட்டங்கள் தயாராகி வருகின்றன. மேல் விபரங்களுக்கு இந்தப் பக்கங்களை அவதானித்து வாருங்கள்.

முழு விபரங்களுக்கு tamilbloggers.org தளத்தில் ஆதரவாளர்கள் பக்கத்தைப் பார்க்கவும்.

பட்டறை நடத்தப் போகிறோம் என்று அறிவித்த உடனேயே, பணம் பற்றிப் பேச்சு எதுவும் வரும் முன்னரே, தொலைபேசியில் அழைத்து பண உதவியை உறுதி செய்தார் திரு சுப்பிரமணியன். அப்போது எப்படி பணத்தை வாங்கிக் கொள்வது, எந்தப் பெயரில் காசோலை கேட்க வேண்டும் என்று கூட முடிவு செய்திருக்கவில்லை. அவரது செயல் குழுவில் எல்லோருக்கும் ஒரு நம்பிக்கையை கொடுத்து பட்டறை முயற்சிகளுக்குத் தனி வேகம் கொடுத்தது.

குறுவட்டுக்கு நான் பணம் கொடுத்து விடுகிறேன் என்று சொன்ன நண்பர், துரத்தித் துரத்தி அந்தப் பணத்தை வாங்கிக் கொள்ள வைத்தார்.

தமிழ்மணம் சார்பாக மதிய உணவுக்கான செலவாக தாமே முன்வந்து பணம் கொடுத்தார்கள். சற்றுமுன் குழுவினரின் சார்பாக தொகையை முதலிலேயே உறுதி கூறி விட்டார்கள்.

பிரகாஷின் முயற்சிகளால் ஹெட்வே பிராபர்டிஸ் நிறுவத்தினர் கணிசமான தொகையைக் கொடுத்தார்கள். பெயர் வெளியிட விரும்பாமல் சின்னதும் பெரிதுமாக பல நண்பர்கள் தமது ஆதரவைத் தெரிவித்தார்கள். ராமகி ஐயா, மாற்று குழுவினர், உண்மைத் தமிழன், சிவஞானம்ஜி ஐயா போன்றோர். பதிவுலகில் தமது பெயர் வெளியே தெரியாமல் படித்து வரும் சிலர், நன்கொடை கொடுப்பதும் வெளியில் தெரிய வேண்டாம் என்று கணக்கில் செலுத்தி விட்டு ஒரு மின்னஞ்சல் மட்டும் அனுப்பி விட்டு பின்னணியில் இருந்து கொண்டார்கள்.

கணினிகளுக்காக ஆன செலவில் பாதி லினஸ் அகாடமியும், கையேடு அச்சிடுவதற்கான முழுச் செலவையும் கிழக்குப் பதிப்பகமும் ஏற்றுக் கொண்டனர். பட்டறை அன்று அமெரிக்கை நாராயணனும், அக்பர் பாஷாவும், வாஞ்சிநாதன், சாபு, நல்லபெருமாள், தாமோதர் சந்துரு, மாலன், ஆசாத் ஆகியோர் மனமுவந்து தமது பையில் இருந்ததை அள்ளிக் கொடுத்து நிதியைப் பெருக்கினார்கள்.

பணமாகச் செலவழிந்தது முப்பதாயிரத்துக்கு அருகிலேயே இருந்தாலும், மொத்தம் திரண்ட நிதி எழுபதாயிரம் ரூபாய்க்கு மேல். தேவைக்கு மேல் வரும் நிதியை மறுத்து விட்டிருக்கலாம் என்றாலும் கொடுத்தவர்களின் ஆர்வத்துக்கு ஊக்குவிப்பும் அளவுகோலும் இல்லாமல் போயிருக்கும். எஞ்சியிருக்கும் பணத்தை tamilbloggers.org தளத்தை மேம்படுத்தவும், சிறிய அளவிலான பட்டறைகளை நடத்துவதிலும், குறுவட்டுகளைத் தயாரித்து வெளியிடவும், eகலப்பை போன்ற தமிழ் மென்பொருள் ஆதரவுக்கும்  பயன்படுத்துவோம்.

நன்கொடைகள் குறித்த முழு விபரங்களுக்கு tamilbloggers.org தளத்தின் ஆதரவாளர்கள் பக்கத்தில் பார்க்கவும்.

கீழ் அரங்கத்தில் கலந்துரையாடல், மேலே செய்முறைப் பயிற்சி என்று வரையறுக்கப்பட்ட சென்னை பதிவர் பட்டறையில் வலை நன்னடத்தை என்ற தலைப்பில் விவாதம் என்ற போதே எங்களுக்குள் பல கேள்விகள் எழுந்தன.. ‘அந்தத் தலைப்பை அவசியம் பேசித்தான் ஆக வேண்டுமா?’, ‘பிரச்சனை செய்யவே வரக் கூடிய பலருக்கு இது வாய்ப்பாகிவிடாதா?’ என்ற கேள்விகள் எல்லா பக்கமும். வலைபாதுகாப்பு குறித்த பேச்சுக்கு ஒரு முன்னோட்டமாக இதுவும் இருந்தால் தான் முழுமையடையும் என்று தான் முடிவெடுத்து அதை அனுமதித்திருந்தோம்.

வலை நன்னடத்தை பேச ஒப்புக் கொண்டது முத்துகுமரன். உரைச்சாரமும் பெற்று வலையேற்றி விட்டிருந்தோம். பட்டறை அமைப்பாளர்களுக்கு ஒப்புதல் இல்லாத எந்தக் கருத்தும் இந்த முன்னுரைச் சாரத்தில் இருக்கவில்லை..

பட்டறை நிகழ்வுக்கு முதல் வாரம் சந்தித்த போது கூட இந்தத் தலைப்பைக் குறித்த விவாதத்தைப் பற்றிய பயம் எங்களுக்கு இருந்தது.. இந்த விவாதம், புதிதாக வலைப்பதிய வருபவர்களுக்கு பயமேற்படுத்தும் விதமாக சோதனைகளை எல்லாம் இழுத்துக் கொண்டு விட்டுவிடக் கூடாதே என்ற பயமும், அது போன்ற திசை திருப்பல்களை எப்படி கையாள வேண்டும் என்ற திட்டமிடலும் இருந்தது.

சற்றும் எதிர்பாராத விதமாக முத்துகுமரனால் கலந்துரையாடலுக்கு வர இயலாமல் போனது. சனிக்கிழமை(ஆகஸ்ட் 4) மாலை, அவசரத்தில் வருகைப் பதிந்தவர்களில் ஒவ்வொருவரையாக கேட்கவும், மாலன் இந்த தலைப்பில் பேச ஒப்புக் கொண்டார்

விவாதம் தொடங்கிய போது “அரசியல் கொள்கை விவாதங்களுக்கு இந்த பட்டறை இடமில்லை” என்று பிறரை மட்டுறுத்திய ஒருவரே, தன்னுடைய நுண்ணரசியல் விளையாட்டுக்கு பட்டறை மேடையைப் பயன்படுத்திக் கொள்வார் என்பது சற்றும் எதிர்பாராதது.. எதிர்பார்த்த சர்ச்சைகள் இல்லாமல், புதிய பிரச்சனையாக ஈழத்துத் தமிழரின் நன்னடத்தை பற்றிய பேச்சு கிளம்பியதில், அரங்கத்தில் மட்டுறுத்தலுடன் பிற பொறுப்புகளையும் சேர்த்து நிர்வகித்துக் கொண்டிருந்த அமைப்பாளர்கள் ஒரு நிமிடம் திகைத்து, பிரச்சனை புரிந்து, அந்த வகையிலான உரையாடல் தொடராமல் தடுக்க மட்டுமே செய்ய முடிந்தது.

ஈழச் சகோதரர்களுக்கு மனவருத்தம் நேரும் வகையிலான பேச்சை, புதியவர்களும் மாணவர்களும் கூடியிருக்கும் பதிவர் பட்டறை அவைக்களத்தில் கேட்க நேரிட்டதற்காக அங்கேயே அப்போதே மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்க வேண்டியது, அமைப்பாளர்களாகிய எங்களின் கடமையே என்பதைக் கண்டிப்பாக உணர்கிறோம். அந்த நேர திகைப்புக்கும், இது போன்ற நிகழ்வுகளைக் கையாளும் பழக்கமற்ற தன்மைக்கும் எங்களைப் பறிகொடுத்துவிட்ட தவறு புரிகிறது.

இது போன்ற நிகழ்வுகள் இனி நேராமல் தடுக்க இந்தச் சம்பவம் எங்களுக்கு ஒரு அனுபவமாக ஆகி விட்டது என்ற போதிலும், சொந்த சகோதரர்களின் வருத்தத்தைச் சம்பாதிக்கும் விதமாக சிதறவிட்டுவிட்ட சொற்களுக்காக இன்று எங்களின் மன வருத்தங்களைப் பகிர்ந்து நிற்கிறோம்.. மன்னிப்பீர்களா சகோதரர்களே?! ….

ஈழத்தவரின் கடவுச்சீட்டு குறித்தும், சக பதிவர் -/பெயரிலி குறித்தும் கூறப்பட்ட கருத்துக்கள், பேச்சாளரின் சொந்த கருத்தே என்பதையும், உரையின் அந்தப் பகுதியை அனுமதித்தமைக்காக எங்களின் வருத்தங்களையும், சென்னை வலைப்பதிவர் பட்டறையின் அமைப்பாளர்களாக பதிவு செய்து கொள்கிறோம்…

பட்டறையைச் செதுக்கிய நூற்றுக் கணக்கான கைகளின் விபரங்களை என்னுடைய கோணத்திலிருந்து தொகுக்கலாம் என்று இந்தப் பதிவுகள்.

  1. பட்டறை கருத்தும் ஆக்கமும்:

    ஆங்கில வலைப் பதிவர்கள் பிளாக்கேம்ப் என்று நடத்தியது போல தமிழிலும் நடக்க வேண்டும் என்று கிட்டத்தட்ட ஒரு ஆண்டாகப் பேசி வரும் விக்கி. ஒவ்வொரு வலைப் பதிவர் சந்திப்பிலும் பட்டறை பற்றி கேட்பார். இந்தப் பட்டறை வடிவத்துக்கான விதையை விதைத்தவர் தண்டோரா விக்கி.அந்த விதை வளர்வதற்கான விளைநிலமாக தமிழ்ப்பதிவுலகை பண்படுத்திய பாலபாரதி.

    சரியாக ஒரு ஆண்டு முன்பு ஆகஸ்டில் ஆரம்பித்து சென்னப்பட்டணம் கூட்டு வலைப்பதிவு மூலமாக, அவரே தனியாகப் பல வேலைகள் செய்தாலும் குழுவுக்கு பேர் கொடுத்து உணர்வை வளர்த்து பட்டறை ஒன்றை நடத்தக் கூடிய சூழலை உருவாக்கினார் விடுபட்டதைச் சொல்லும் பாலபாரதி.கையில் பிரம்பு மட்டும்தான் குறைச்சலாக, பள்ளி ஆசிரியை போல எல்லோரையும் மிரட்டியும் விரட்டியும் வேலைகளை ஒருங்கிணைத்து நடக்கவும் ஓடவும் வைத்த பூக்கிரி பொன்ஸ். நேரடிச் சந்திப்புகளிலும் சரி, இணைய வழி விவாதங்களிலும் சரி, ஒருங்கிணைப்பு ஆவணங்களைத் தொகுப்பதிலும் சரி யார் என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவை கொடுத்து இயக்கி வந்தார் பொன்ஸ்.நெதர்லாந்தில் இருந்து கொண்டு ஆற்றல் பந்தாக, மடற்குழுவில் உசுப்பிக் கொண்டிருந்த ரவிசங்கர், கொள்கை முடிவுகளை சரியான திசையில் செலுத்துவதோடு, அவற்றைக் காரண காரியங்களோடு எல்லோருக்கும் புரியும் வண்ணம், ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கையாண்டார். பட்டறை நல்லுணர்வோடு நடந்து முடிந்ததற்கு ரவிசங்கரின் கருத்து வழிகாட்டல்கள் அடிப்படையாக இருந்தன.அரங்கம் ஏற்பாடு, பெரும் பண உதவிகள் என்று பெரிய வேலைகளை தனது தொடர்புகள் மூலம் செய்து முடித்துக் கொடுத்த ஐகாரஸ் பிரகாஷ். வேலைப் பளு காரணமாக திட்டமிட்டிருந்த அளவு களப்பணியில் இறங்க முடியா விட்டாலும், நிகழ்வை நிலை நகர்த்தி ஓட வைத்த ஆரம்ப உந்தம் பிரகாஷ் கொடுத்தது. அவ்வப்போது திறமையான இடை முயற்சிகளால் ஓட்டத்தை வேகப்படுத்திக் கொண்டிருந்தார்.

    பட்டறைக்குச் சின்னமா, கணிச் சுவடி புத்தகமா என்று சலிக்காமல் கடும் உழைப்பு தேவைப்படும் பணிகளை சுறுசுறுப்பாக முடித்துக் கொடுத்து பின்னணியில் பணி புரிந்த சிந்தா நதி.

    தனக்கே உரிய மண்ணின் மணத்தோடு கூடிய நகைச்சுவையுடன் குழுவைக் கலகலக்க வைத்து குறுவட்டு மேல் பட வடிவமைப்பு, தட்டிகள் உருவாக்கம், சட்டையில் குத்தும் அடையாள அட்டை ஏற்பாடு செய்தல் என்று அலைந்த லக்கிலுக்.

  2. குறுவட்டு

    கருத்து
    : இப்படி மென்பொருட்களைத் தொகுத்து வினியோகிக்க வேண்டும் என்று ஆரம்பித்து வைத்தார் பாலபாரதி

    திரட்டல் : மென்பொருட்களைத் திரட்டுவதற்காகப் பலரையும் தொடர்பு கொண்டார் விக்கி

    தொகுத்தல் : திரட்டியவற்றை வகைப்படுத்தி ஒரு அடைவாக உருவாக்கிக் கொடுத்தார் பிரியன்

    மேல் படம் உருவாக்கம் : லக்கி லுக்

    உள்ளடக்க வழங்கல் : பிளாஷில் மூன்று நாட்களாகத் தூக்கம் பார்க்காமல் அழகாக வடிவமைத்துக் கொடுத்தார் நந்தா.

    குறுவட்டை உருவாக்க அலைந்தவர் : பாலபாரதி

    பொருளுதவி : ஓகை நடராஜன்

  3. கணிச்சுவடி

    கருத்து : இப்படி ஒரு கையேட்டை உருவாக்கி வினியோகிக்க வேண்டும் என்று சொல்லிச் சொல்லி நடக்க வைத்தவர் பாலபாரதி

    ஆக்கம் : சரளமான நடையில் எல்லோருக்கும் புரியும் வண்ணம் எழுதி முடித்த சிந்தாநதி

    உருவாக்கம் : 1000 பிரதிகளாக அச்சடித்துக் கொடுத்து விட்ட கிழக்கு பதிப்பகத்தின் பத்ரி.

  4. அரங்கம்

    கொடுத்தவர்கள் : சென்னைப் பல்கலைக்கழகம்

    ஒருங்கிணைத்தவர்
    : சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியர் ஜெயதேவன்

    தொடர்பு ஏற்படுத்தியவர்கள் : ஐகாரஸ் பிரகாஷ், பத்ரி

    ஒருங்கிணைப்பில் உதவி
    : சிவஞானம்ஜி ஐயா அவர்கள்

  5. ஊடகத் தொடர்பு

    ஹலோ பண்பலை, இந்து நாளிதழ், இந்தியன் எக்ஸ்பிரஸ் என்று தனது தொடர்புகளைப் பயன்படுத்தி நிகழ்வுக்கு முந்தைய செய்திகளை வெளி வரச் செய்த விக்கி. எல்லா பத்திரிகைகள், தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் சிறப்பு அக்கறை எடுத்துக் கொண்டு கடிதமும், மின்னஞ்சலும், தொலைநகலும் அனுப்பி, நிகழ்வன்றும் எல்லோரையும் தொடர்பு கொண்டு வர வைத்து வெளிச்சம் கொடுக்க உதவிய உண்மைத் தமிழன். நிகழ்வன்று உடனுக்குடன் படங்களை வலையில் ஏற்றி எல்லோரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஓசை செல்லா, ஐரோப்பிய தமிழ் வானொலி மூலம் முந்தைய வாரமும், நிகழ்வன்றும் பட்டறைக்கு முதலிடம் கொடுத்து பெருமைப் படுத்திய மலைநாடான்

  6. இணையத் தளம்

    பெயர், இட உதவி : விக்கி

    உருவாக்கம் : விக்கி பயன்பாட்டில் தளத்தை அழகாக பராமரித்தவர் ரவிசங்கர்

  7. கணினிகளும் இணைய இணைப்பும்

    கணினி அறைகளில் மேசைகளை அமைத்து கணினிகளை இணைத்து ஓட வைப்பதில் முதன்மை பங்கு வகித்த வினையூக்கிதன் சொந்தப் பொறுப்பாக எடுத்துக் கொண்டு முதல் நாள் மாலையிலும் நிகழ்வு நாள் காலையிலும் கணினிகள் சரிவர இயங்க வருந்தி உழைத்த ஜேகே என்ற ஜெயகுமார் 20 கணினிகளையும் கொண்டு வந்து சேர்த்து கூடவே இருந்து சரியாக ஓட வைத்து ஐசிஎம் நிறுவனத்தினர்.

    கணினிகள் வாடகைக்கு எங்கு ஏற்பாடு செய்வது என்று தேடிக் கொண்டிருந்த போது பொறுமையாக பல நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு கடைசியில் ஐசிஎம் நிறுவனத்துக்கு வழி காட்டிய யோசிப்பவர் மகேசன்10 கணினிகளுக்கான வாடகையை நன்கொடையாக வழங்கிய லினஸ் அகாடமியினர்வெள்ளிக் கிழமை ஆரம்பித்து கம்பியில்லா இணைய இணைப்பை வழங்க உழைத்த சிபி நிறுவன பொறியாளர்கள்

  8. நிகழ்ச்சி ஏற்பாடுகள்

    சாப்பாடு, தண்ணீர் என்று ஆரம்பித்து ஒன்று மறக்காமல் எல்லாவற்றுக்கும் ஏற்பாடு செய்து விட்ட பாலபாரதி முதல் ஆளாக வந்து கண்ணில் பட்ட வேலைகளில் கை கொடுத்து வண்டியை நகர்த்தி சென்ற சுந்தர். ஆர்வத்தோடு முன்வந்து வரவேற்பு, உதவி, உணவு வழங்கல் போன்ற நிர்வாகப் பணிகளுக்கு முழுப் பொறுப்பு ஏற்றுக் கொண்டு சிறப்பாகச் செய்து முடித்த ஜெயமாலினி காபி இயந்திரத்தைக் கொண்டு வந்து அமைத்துக் கொடுத்த அருள் குமார் நாள் முழுவதும் பம்பரமாகச் சுற்றிக் கொண்டிருந்தார். அதை இயக்கி காபி வழங்கலும் செய்த ஜெய்சங்கர்.முதல் நாள் மாலையில் சென்னையை கிழக்கு மேற்காக இரண்டு முறை அளந்து வந்தும் சலிக்காமல் வேலைகளைத் தொடர்ந்த நந்தா.

    பேனர்கள், அமைப்புகள் என்று ஒருங்கிணைத்து முடித்த லக்கிலுக்.

    என்ன வேண்டுமானாலும் நாங்கள் இருக்கிறோம் என்று தோள் கொடுத்த தமிழ்த் துறை மாணவர்கள் மற்றும் பல்கலையில் பணி புரியும் ஊழியர்கள்.

    காலையிலேயே வந்து வேலைகளைச் சலிக்காமல் செய்த அதியமான்

  9. அரங்க மேலாண்மை

    பயிற்சிப் பட்டறைதான் முக்கியமான களமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்ததும் வாத்தியார் அம்மா பொன்ஸ் முழுப் பொறுப்பு ஏற்று இரண்டு அறைகளையும் நடத்தி சென்றார்.முப்பது பேருக்குக் குறையாமல் சொல்லிக் கொடுத்தேன் என்று மாலையில் சொல்லும் போது முகத்தில் மலர்ச்சி குன்றாமல் செயல்பட்ட வினையூக்கி. சரியான அமர்வுகள் நடக்க வேண்டும் என்று பட்டியலிட்டு, சேர்த்து, நீக்கி வழிகாட்டிய ரவிசங்கர். பேச்சாளர்களைத் தொடர்பு கொண்டு ஒருங்கிணைத்த பொன்ஸ். இறுதியாக நிகழ்ச்சி நிரலை எழுதிப் போட்ட விக்கி. அமர்வுகள் முந்தையது அடுத்து வருவதை தாங்குவது போல அழகாக வரிசைப்படுத்தியிருந்தார்.ஒரு புரஜெக்டர், ஒலிப்பதிவுக் கருவி என்று இன்றியமையாத தளவாடங்களை வழங்கியதோடு இல்லாமல், உற்சாகமாக முதல் வரிசையில் அமர்ந்து பேசுபவர்களுக்கு உதவிகள் செய்து கொண்டிருந்த பத்ரி.

    தார்மீக ஆதரவு அளிக்க வேண்டும் என்று பல வேலைகளுக்கிடையே வந்திருந்து பங்களித்து உதவிய மாலன், காசி ஆறுமுகம், முகுந்தராஜ், ஓசை செல்லா, ராமகி ஐயா.

    unconference பாணியில் அறிமுகம் கொடுத்த விக்கி

    நாள் முழுவதும் அரங்கின் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்த நான்.

இன்னும் குறிப்பிடப் படாத நூற்றுக் கணக்கானவர்களின் உழைப்பில் உருவானது இந்தப் பட்டறை. தமிழர்களால், இணைந்து, சுய நோக்கில்லாமல் இப்படி ஒரு நிகழ்வை நடத்த முடியும் என்று காட்டியது இந்தப் பட்டறையின் தாக்கங்களில் முக்கியமான ஒன்று.

பட்டறைக்கு வந்தவர்களின் எண்ணிக்கைக் கணக்கு - பதிவுத் தாள்களில் எண்ணியது

இணையத் தளத்தில் பதிந்து வந்தவர்கள் - 149
தமிழ்த்துறை மாணவர்கள் - 79
முன்பதியா விருந்தினர் - 75

மொத்தம் - 303

இன்னும் நான்கு முறை எண்ணினால் ஓரிரண்டு கூடுதல் குறைவு இருக்கலாம்.

பதிவர் பட்டறை குறித்த படங்கள், நிகழ்படங்களை (video) Flickr, Picasa, YouTube, Google Video போன்றவற்றில் இடுபவர்கள் பதிவர்_பட்டறை என்ற குறிச்சொல்லைப் பயன்படுத்துங்கள்.

பதிவுகளில் எழுதுபவர்கள் பதிவர் பட்டறை என்று குறிச்சொல் இடுங்கள். அனைவரும் ஒரே குறிச்சொலைப் பயன்படுத்துவது இந்த இடுகைகளைத் தொகுக்க வசதியாக இருக்கும்.

Flickr, Picasa, Youtube, Google videoவுக்கான குறிச்சொல் - பதிவர்_பட்டறை (Underscoreஐ நினைவில் கொள்ளுங்கள்)
பதிவுகள் - பதிவர் பட்டறை (Underscore தேவை இல்லை)

நன்றி

பதிவர் பட்டறை நடைபெறவிருக்கும் பதிவர் பட்டறை நடக்கும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை அரங்கிற்கு எப்படி வருவது?                    * தமிழ்த்துறை அரங்கம் மாநிலக் கல்லூரிக்கும் விவேகானந்தர் இல்லத்திற்கும் நடுவில் மெரினா வளாகம் உள்ளது.

*  பறக்கும் ரயிலில் வருவோர் திருவல்லிக்கேணி புகைவண்டி நிலையத்தில் இறங்கவும்.

* பேருந்தில் வருவோர் கண்ணகி சிலை நிறுத்தத்தில் இறங்கி விவேகானந்தர் இல்லம் இருக்கும் திசையில் நடக்கவும்.

* வாடகை வாகனங்களில் வருவோர் பல்கலைகழக விருந்தினர் விடுதி என்று தெளிவாக இடத்தைக் குறிப்பிடவும். (இல்லாவிடில் சேப்பாக்கம் அரசு விருந்தினர் விடுதிக்கு இட்டுச்செல்லக் கூடும்)

*  மெரினா திருவள்ளுவர் சிலைக்கு எதிர்ப்புறம்தான் பட்டறை நடைபெறும் அரங்கம் உள்ளது. மெரினா திருவள்ளுவர் சிலை என்பதை மறவாதீர். ஏனெனில் மைலாப்பூரிலும் திருவள்ளுவர் சிலை உள்ளது!

பதிவர் பட்டறை உங்களை வரவேற்பதில் பெருமை அடைகின்றது!

நன்றி: சிஜி 

சென்னை வலைப்பதிவர் பட்டறை அரங்கில் wi-fi இணைய இணைப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தங்கள் மடிக்கணினி, digi cam, handy cam போன்றவற்றைக் கொண்டு வந்தால் பட்டறை அரங்கில் இருந்தே நிகழ் பதிய (live blogging) வாய்ப்பாக இருக்கும். ஒலி, ஒளிப்பதிவு நுட்பங்களைப் புதியவர்களுக்கு செய்து காட்டவும் உங்கள் ஐயங்களைத் தீர்த்துக் கொள்ளவும் உலகெங்கும் உள்ள பதிவர்களுக்கு நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிவிக்கவும் உதவும்.

இடம்: தமிழ்த் துறை அரங்கம், சென்னைப் பல்கலைக்கழகம், மெரினா கடற்கரை வளாகம். திருவள்ளுவர் சிலை எதிரில்

wikimapiaவில் மெரினா கடற்கரை வளாகம்: + குறி இடப்பட்டுள்ள பெட்டியைப் பாருங்கள்.

பேருந்து நிறுத்தம்: கண்ணகி சிலை நிறுத்தம்.
பேருந்துகள்: 21G, 21L, 21P, 21E, 21H, 21K, PP21, PP19, 6D, 6E, 6A, 2A

மிக அண்மையிலுள்ள தொடர்வண்டி நிலையம்: திருவல்லிக்கேணி தொடர்வண்டி நிலையம், பல்கலைக்கழக மெரினா வளாகத்துக்கு பின்னாலேயே திருவல்லிக்கேணி தொடர்வண்டி நிலையம் உள்ளது

நேற்றைய இந்தியன் எக்ஸ்பிரஸில் வந்த நிகழ்வு குறித்த செய்தி …

tamilblogcamp_ind_express_coverage.jpg

நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்

Next Page »